Thursday 30 October 2014

அரசியலில் நாம் எப்போது வெற்றிபெற முடியும்?

இந்த மண் நமது சொந்த மண், இந்த மண்ணுக்குச் சொந்தககாரர்கள் நாம்தான், பூர்வகுடித் தமிழர்களின் அடையாளம் நம் அடையாளம்தான் என்ற உண்மையும் உணர்வும் நமக்குள் தீவிரமாக எழுந்தால் மட்டும்தான் நாம் நமக்கான அரசியலில் வெற்றிபெற்று எழமுடியும். அதற்கு முதலில் நம் பழமையான வரலாற்று விவரங்களை நாம் தெரிந்திருத்தல் வேண்டும். இந்த உணர்வு படிப்படியாக ஆரோக்கியமான வெறியாக மாறாமல் நாம் நம் மாற்றத்தை வேறு எங்கிருந்தும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. நாம் தொடங்கவேண்டிய முதற்புள்ளியும், இணையவேண்டிய கடைப்புள்ளியும் இதுவொன்றுதான். இல்லாவிடில் நம் அறிவாளிகளின் உழைப்பு வீண்தான்.

மீனவன் / இடையன்

மீனவன், மீனவர்கள் என்பது சாதிப்பெயரா? சாதி அடையாளமா? அது ஏதேனுமொரு மதத்தைக் குறிக்கிறதா? இல்லை. அதுவொரு தொழிற்பெயர். தமிழர்களின் அடையாளங்கள் எல்லாம் இப்படித்தான் சாதியாகவோ மதமாகவோ அடையாளப்படுத்தப்படவில்லை.

தமிழர் வகுத்த பிரிவுகள் :

அரசன்
அந்தணன் (சான்றோன்)
வேளாளன்
வணிகன்
மற்றும் நிலத்தை அடிப்படையாக வைத்து ஐந்திணை அடையாளங்கள்.

குறிஞ்சி - வேடன்
முல்லை - இடையன்
மருதம் - வேளாளன், குடியானவன், மள்ளன்
நெய்தல் - மீனவன், கொங்கன், சேர்ப்பன், மருதன், துறைவன்
பாலை - கள்வன் (களவைத் தொழிலாக மேற்கொள்பவன்)

இவற்றில் யார் வேண்டுமானாலும் யார் வீட்டுப் பெண்ணையும் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதியிருந்தால் மணக்கலாம். தடையில்லை. அந்தணன் என்பது தமிழ்ச்சொல். இதற்கு பிராமணன் என பலரும் தவறாக எண்ணுகின்றனர். அந்தணர் என்போர் எல்லா பிரிவு சான்றோர்களையும் உள்ளடக்கியது.

வர்ணாசிரமம் வகுத்த பிரிவுகள் :

பிராமணன்
க்ஷத்ரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்

இப்பிரிவுகள் எல்லாம் தமிழர்களின் வாழ்வியலுக்கு நேர்மாறானது. மனிதர்களை பிரித்துவைப்பதன் நோக்கோடு வகுக்கப்பட்டது.

மீனவன் என்ற அடையாளத்தைப் போன்றே இடையன் என்ற அடையாளமும் சாதி, மத அடையாளமற்றது. தமிழர்களின் தொன்மையான தொழிற்சார்ந்த பெயர்கள். ஆனால் மீனவன் என்ற அடையாளம் உலவும் அளவிற்கு இடையன் என்ற அடையாளம் உலவவில்லை. உலவவில்லை என்பதைவிட தவிர்க்கப்படுகிறது என்பதே உண்மை.

எவனும் எந்த அடையாளத்தையும்விட மேலானவனும் இல்லை, கீழானவனும் இல்லை என்பதே தமிழர்களின் அடையாளப் பெயர்கள். இப்பெயர்களுக்குப் பின்னால் கட்டுக்கதைகளும் பொய் புரட்டு புராணங்களும் கிடையாது. வாழ்வியல் முறையின் அடிப்படையிலானது. ஆனால் பார்ப்பான் திணித்த அடையாளங்கள் அப்படியல்ல. பொய் புளுகு கட்டுக்கதைகளே அதற்கு பிரதான பெருமை. எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் பெரும்பாலான தமிழ்ச் சகோதரர்களுக்கு புரிவதில்லை.

நண்பர்களே,
க்ஷத்ரியன்... வைசியன்... என்ற பார்ப்பன வர்ணாசிரம அடையாளங்களையும் பெருமைகளையும் தயவுசெய்து தவிப்பீர்களாக.

எவ்வளவு படித்தும் என்ன பயன்?

நண்பர்களே.., தயவுசெய்து உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்ட பழைய சிந்தனைகளை அலசி ஆராயுங்கள். கண்ணைமூடிக்கொண்டு எதையும் பின்தொடராதீர்கள். மாற்றுக்கருத்துக்களை தேடிப் படியுங்கள். உங்கள் கருத்து சரியானதுதானா என ஆராயுங்கள். இல்லையேல் நீங்கள் எவ்வளவு படித்தும் என்ன பயன்?

எங்கே இருக்கிறார் கடவுள்?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.

“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும். “இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார்.

- குரங்கின் தூதுவன் என்ற முகநூல் பக்கத்திலிருந்து

இடையர்களே அரசியலுக்கு வாருங்கள்...

எல்லோரும் அவரவர் திறமைக்கேற்ப உங்கள் பகுதி உள்ளூர் அரசியலில் ஈடுபடுங்கள். ஓராயிரம் பேர் ஈடுபட்டால்தான் ஒருவருக்காவது பதவி கிடைக்கும். அடுத்தவர்களை வளர்த்துவிட்டு ஒதுங்கி நிற்காதீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அரசியலுக்கு வாருங்கள். மாநிலக் கட்சிகளில் பங்கெடுங்கள், ஏழை எளிய மக்களுக்கு கை கொடுங்கள்.

பிரச்னைகளுக்கான நிரந்தரத் தீர்வு

உங்கள் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வாக வன்முறையை தேர்ந்தெடுக்காதீர்கள். புலியின் வாலைப் பிடித்த கதையாக அது வளரும், பின் நம்மையும் தாக்கும். ஒரு இனத்துக்காக வாழ்வையும் உயிரையும் துறப்பதைவிட அதற்காகவே வாழ்வதே அறிவாளித்தனம். உணர்ச்சி வேகத்திற்கு ஆட்படாமல் மன அமைதியோடும் சமயோசிதத்தோடும் எதையும் எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள். இதுதான் நிரந்தரத் தீர்வாகும்.

Tuesday 21 October 2014

மண்குதிரைகளின் மீதான பயணம்?

முதலில் நம் இளைஞர்களின் சிந்தனைகளை மாற்ற வேண்டும். பிறகுதான் மாற்றங்கள் சாத்தியம். அறிவுப் புரட்சியை நடத்தாமல் அரசியல் புரட்சியை நடத்த வாய்ப்பில்லை. அறிவார்ந்த இளைஞர்களாலே ஒரு சமூகம் நிரந்தரமாக முன்னேற்றமடையும். அறிவுக்கு ஒவ்வாத பழமையான கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முற்போக்கு சக்தியாய் மாறுங்கள். மாற்றுங்கள். காலம் அதிகமானாலும் இதுவே நமக்கு நிரந்தர பாதுகாப்பும் தீர்வுமாக இருக்கும். நம் இளைஞர்களிடம் முற்போக்குக் கருத்துக்கள் எதையும் பிரச்சாரம் செய்யாமல் அவர்களை உலக ஓட்டத்திற்கு ஏற்ப தயார் படுத்தாமல் வெறுமனே முன்னேற்றத்திற்கு பாடுபடுவதாய் அறிவித்துக்கொண்டு செயல்படும் எந்தவொரு அமைப்பும் நம் மக்களின் அறியாமையை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவே அர்த்தம். எல்லோரின் உழைப்பும் அக்கறையும் வீணாகக் கூடாது என்பதே எம் விருப்பம்.

விருப்பமுள்ளவர்கள் பகிருங்கள்...

சூரிய சந்திர கிரகணங்களை மனிதன் முன்கூட்டியே கணித்தது எப்படி?

ஒருகணம் கண்ணை மூடி ஆதிகாலத்திற்குச் செல்லுங்கள். ஆதியிலிருந்து படிப்படியாக நாகரிகத்தில் வளர்ந்த மனிதன் ஒரு காலகட்டத்தில் கணித சிந்தனைக்குள் நுழைகிறான். எல்லாவற்றையும் ஏதோவொரு கணக்குக்குள் கொண்டுவருகிறான். அதன் நீட்சியாய் இயற்கையாய் அவன் கண்ட இரவுபகலை வகுக்க ஆரம்பிக்கிறான். நாட்களை வரையறுக்கிறான். நாழிகை அளவீடுகளால் நாட்களை பிரிக்கிறான். பின் இதனடிப்படையில் படிப்படியாய் ஜாமம், வாரம், மாதம், பருவகாலம், வருடம் என கணிதம் விரிகிறது. காடுகளின் நடுவே விலங்கோடு விலங்காய் வாழ்ந்த அவனுக்கு அப்போது பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்னவென்றால் இயற்கையாக அவனோடு வாழ்ந்த வானம், சூரியன், நிலா, மழை, வெயில், இடி, மின்னல், விண்மீன்கள், மரணம் இவைகள்தான்.

உணவுதேடி பூமியில் உழைத்துவிட்டு இரவில் வானமே கூரையாய் படுக்கும்போது நாள்தோறும் அவனது கவனம் வானத்திலேயே குவிந்திருக்குமென்பது இயல்புதான். எல்லா காலகட்டத்திலும் அவ்வப்போது ஒரு அதிக கூர்மையான சிந்தனை படைத்தவன் வாழ்ந்துதான் இருப்பான். அப்படி ஒருவன் தொடர்ச்சியாக இந்த இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து அவதானித்திருப்பான். தினசரி நகரும் நிலவையும் சூரியனையும் விண்மீன்களையும் பற்றி சிந்தித்த அவன் அதைப்பற்றிய ஆவலை தன் உணர்வையொத்த சக மனிதர்களிடம் அறிவித்து ஒரு குழுவாய் பல வருடங்களாய் பரம்பரையாய் அதன் நகர்வுகளை பின்தொடர்ந்திருப்பார்கள்.

இன்றைக்கு நாம் சாதாரணமாக கருதும் ஒவ்வொரு அறிவியல் உண்மைகளின் பின்னாடியும் பல நூற்றாண்டுத் தேடல் இருப்பது யோசிக்கத்தக்கது. இப்படி தொடர்ச்சியாய் கணித அறிவோடு இயற்கையை கவனித்தபோது, அவ்வப்போது சூரியன் சற்றுநேரம் இருளடைவதும் பௌர்ணமியன்று நிலா இருளடைவதும் அவர்களை அச்சப்படுத்தியிருக்கும். இதற்கு காரணம் (பாம்பு, ராகு, கேது) இதுதான் என அப்போது அவர்களுக்கிருந்த அறிவுப்படி எதையாவது அக்கால மக்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒருவாறாக சொல்லியிருக்கலாம். இதெல்லாம் நிழல்கள்தான் என்பது இன்றைக்கு அறிவியல் கண்டுபிடித்துவிட்டது.

அடுத்தடுத்து நடக்கும் இவ்வாறான இரண்டு நிகழ்வுகளுக்குள் இருக்கும் கால இடைவெளியை ஒருமுறை கணித்து, அடுத்தமுறை தோன்றும் இடைவெளியோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே அடுத்தடுத்து அது தோன்றக்கூடிய காலக்கணக்கு எளிதில் வசப்பட்டுவிடுகிறது. ஏற்கெனவே நாழிகை, நாட்கள், மாதம், வருடம் என அவன் வகுத்த கணக்குகளின் துணையால் அடுத்தடுத்த தொடர்ச்சியான கிரகணங்களை அவன் கணித்துவிடுகிறான். இதனடிப்படையில்தான் சித்தர்களும் கோள்களின் நகர்வுகளை கணித்திருக்கக்கூடும். இது அறிவை பயன்படுத்தியவர்களின் கூட்டுச்செயல்தானே தவிர தனி மனித சாகசமில்லை. இதிலெல்லாம் கடவுளின் அருள், ஞானம் என்பதுமாதிரியான தனிப்பட்ட விசேஷங்கள் எதுவுமில்லை. அப்படி ஒன்று இருந்திருந்தால் அவ்வுண்மைகளோடு தோராயமான புனைகதைகளெல்லாம் கலந்து இன்றுவரையிலும் மக்கள் மத்தியில் உலவிக்கொண்டிருக்க வாய்ப்பேயில்லை.

எக்காலத்திலும் அதிகமான ஆர்வத்தோடும் அக்கறையோடும் ஆழ சிந்திக்கிறவனால்தான் எல்லா உண்மைகளும் மக்களுக்குத் தெரியவந்தது, தெரியவருகிறது. அறிவியல் வளர்ந்த இக்காலகட்டத்திலும் நிலவில் வளர்பிறையும் தேய்பிறையும் எப்படி தோன்றுகிறது என்பது முக்கால்வாசிப் பேர்களுக்குத் தெரிவதில்லை என்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். மின்சாரம் வராத காலகட்டத்தில் இரவுகளில் இந்த வானத்தோடும் நிலவோடும் விண்மீண்களொடும்தான் நாமும்தான் வாழ்ந்துகொண்டிருந்தோம். பல நூறு ஆண்டுகளாக இப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்களின் கண்டுபிடிப்புகள்தான் இவைகளேதவிர கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியுமில்லை.

அப்படி கடவுள் ஒருவனே எல்லாவற்றுக்கும் காரணமாகவும் மனிதர்களைப் படைப்பதாகவும் இருந்தால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அதன் மூளையில் பகவத்கீதையையோ குர்ரானையோ பைபிளையோ இன்னபிற புனிதக்கதைகளையோ புகுத்தி படைக்கலாமே?

பிறந்து சில நாட்களே ஆன பலகுழந்தைகள் நீராலோ நெருப்பாலோ விபத்தாலோ இறந்து போகும்படி படைக்கப்படுவது ஏனோ?

Wednesday 1 October 2014

கம்யூனிசம் தோற்றுப்போனதா?

சகல மக்களின் ஏற்றமும் தாழ்வும் சக மக்களின் உழைப்பைச் சுரண்டும் சூழ்ச்சிக்காரனாலேதான் ஏற்படுகிறது. கடவுள், தலைவிதி என்று ஏதுமில்லை. மக்களின் அறியாமையைக்கொண்டே அவர்களை பலாத்காரப்படுத்தி வைக்கவே இவைகள் உண்டாக்கப்பட்டன. முதலாளித்துவவாதிகளின் பலம் இதிலேதான் இருக்கிறது. மார்க்சியம் என்பது அறிவியல். சகல மக்களும் மாற்றத்திற்கான அவசியத்தை உணரும்போதே இது சாத்தியம். கம்யூனிசத்தின்பேரில் அரசமைத்த நாடுகளின் ஆற்றலையெல்லாம் தன்னுடன் மோதி அழிப்பதிலேயே கவனமாய் காவு வாங்கிக்கொண்டது முதலாளித்துவம். இருந்தும் அது அரசாண்டவரையில் பிற நாட்டு வளர்ச்சிகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மக்களின் அறியாமை முற்றிலுமாக விலகவேண்டும் என்ற அக்கறையில் ஆதாயம் கருதாமல் உலகில் எங்கேனும் கட்சியோ இயக்கமோ முதலாளித்துவவாதிகளால் நடத்தப்படுகிறதா? இருக்காது. மக்களின் அறியாமைதான் அவர்களின் சொகுசு வாழ்வின் அட்சய பாத்திரம். ஆனால் எவ்வித ஆதாயமும் கருதாமல் உடல் பொருளையும் இழக்கும் தியாக மனப்பான்மையோடு உலகில் ஏராளமான கம்யூனிச இயக்கங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டு கொடுமைகளை, சுரண்டல்களை, அறியாமைகளை 200 ஆண்டுகால மார்க்சியம் உடனடியாக வெல்லும் என்று எதிர்பார்ப்பதும்; வெல்லவே முடியாது என்று கட்டியம் கூறுவதும் நியாயமில்லை. வளரும்போதே சதி செய்து அதை வீழ்த்தும் மனசாட்சியற்ற முதலாளித்துவத்தின் முன்னால் போராடி வெற்றி பெறுவது எளிதல்ல. இன்றைக்கு பல நாடுகளிலும் கம்யூனிசத்தின்பேரால் பல வடிவங்களில் பிழைப்புவாத அரசியல் செய்ய வந்துவிட்டார்கள் பல முதலாளித்துவவாதிகள். இதுவும் திட்டமிட்ட சதி. இதனாலேயே ஆழ உணராத மேலோட்டமான தன் ஆதரவாளர்களிடம் கம்யூனிசம் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது எனலாம். கம்யூனிசம் தங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பது ஏமாற்றுக்காரர்களுக்குத் தெரிகிறது, ஆனால் இது எவ்வளவு பாதுகாப்பு என இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. பூரணமாய் இருந்தவரையில் குறுகிய காலத்திலேயே அந்தந்த நாடுகளில் கம்யூனிசம் சாதித்தது ஏராளம். இந்த நூற்றாண்டோடு உலக வரலாறு முடிந்துவிடவில்லை. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுமே முதலாளித்துவ சுரண்டலை தம் மதத்தின் பேரால் காப்பாற்றியாக வேண்டிய அடியாட்களாகவே வளர்க்கப்படுகிறது. கம்யூனிசத்தை வளர்க்க எந்தக் குழந்தைகளும் இயல்பிலேயே வளர்ப்பில் தயாரிக்கப்படுவதில்லை. அது தானாய் தன் அறிவைத் தேடலை மதங்களைத்தாண்டி வளர்த்துக்கொண்டாலொழிய கம்யூனிசத்திற்கு ஆதரவு என்று உருவாக வாய்ப்பில்லை. முதலாளித்துவம் தன் அடியாட்களை இயற்கையிலே சர்வ வல்லமையோடு இப்படியாக தயாரித்துக்கொண்டிருக்க கம்யூனிசம் தோற்றுப்போனது எனக் கருதுபவர்களின் அரசியல் அறிவை நாம் எங்ஙனம் விமர்சிப்பது?

கம்யூனிசம் தோற்கவில்லை...
முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யூனிசமே...!